Wednesday, March 30, 2011

அரிசி அரிப்பும் உடன்குடி கருப்பட்டியும்!

டன்குடி பற்றிய  தன் பால்ய கால நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லாஹ்!


''நான் இரண்டாம் வகுப்பு வரை உள்ளூ ரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் படித்தேன். எனது தாத்தா, தந்தை, பெரிய தந்தை மூவரும் இலங்கையில் வர்த்தகம் செய்தவர்கள். ஸ்ரீமாவோ - சாஸ்திரி உடன்பாட்டுக்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட சூழல் காரணமாக, சொந்த நாட்டுக்கே திரும்பிவிட்டனர். அதன் பிறகு, எனது தந்தை சென்னை கொத்தவால் சாவடியில் வியாபாரம் செய்ததால், சென்னைக்குக் குடிபெயர்ந்தோம். அதனால் நானும் சென்னைக்கு வர வேண்டிய தாயிற்று.

ஆனாலும், எனக்கு உடன்குடி மீது தீராத பிரியம் உண்டு. ஒவ்வொரு விடுமுறை யின்போதும், சொந்த ஊரில் இருக்கும் எனது மாமா பாதுஷா வீட்டுக்கு வந்துவிடு வேன். விடுமுறைக்கு உடன்குடி வரும்போது  மாலை நேரங்களில் நண்பர்களோடு விளையாடி முடித்து வீட்டுக்கு வந்ததும், 'அரிசி அரிப்பு’ என்று ஒரு பலகாரம் தயாராக இருக்கும். அரிசி, தேங்காய் ஆகியவற்றை நன்றாக வறுத்து அதனுடன் முட்டை, தேங்காய்ப் பால் சேர்த்து மீண்டும் சூடுபடுத்தி, அனைத்தையும் பவுடர் ஆக்குவார்கள். பிறகு, அத் துடன் சீனி கலந்து சாப்பிடத் தருவார்கள். களைத்து வரும்போது சாப்பிடுவதற்கு அத்தனை ருசியாக இருக்கும்!

எங்களுக்கு உடன்குடியில் நிறைய பனை, தென்னை மரங்கள் உண்டு. அங்கே பதநீரில் இருந்து காவா என்ற பானம் செய்து கொடுப்பார்கள். அதன் ருசியே தனி. இந்தப் பகுதியில் செய்யப்படும் சில்லுக் கருப்பட்டி, வெள்ளைக் கருப்பட்டி ரொம்பவே ஃபேமஸ்.

ஒரு காலத்தில் உடன்குடி வெற்றிலைக்கு மவுசு ஜாஸ்தி. மழை குறைந்துவிட்டதால், நிலத்தடி நீர் உப்பாக மாறி,  வெற்றிலை விவசாயம் அடியோடு அழிந்துவிட்டது. உடன்குடியில் வாழை ஏகமாகப் பயிரிடுவார்கள். இங்கு விளையும் பூலாஞ்செண்டு வாழைப்பழம் நல்ல ருசியாக இருக்கும்.

சிறு வயதில் வாதாங்கொட்டை பழம் பறித்துச் சாப்பிட நண்பர்களோடு அலைந்த அனுபவங்களை என்றென்றும் மறக்க முடியாது. பனம்பழத்தைச் சுட்டு சாப்பிட்டால், சுவையாக இருக்கும். சென்னையில் இருந்து நான் வந்துவிட்டால், எங்கள் மாமா வீட்டில் எப்போதும் பனம் பழம் சுட்டுக் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அதன் வாசனை தெருவெங்கும் அலைந்து ஆட்களை இழுக்கும். இப்போதும் நண்பர்களோடு காட்டுக்குச் சென்று தீ மூட்டி பனம்பழத்தைச் சுட்டு சுவைத்தபடி பல விஷயங்களைப் பேசிக்கொண்டு இருப்போம்.

வணிக நிமித்தமாக பல்வேறு நகரங்களுக்கும் நிறையப் பேர் இடம்பெயர்ந்து சென்றுவிட்டதால், உடன்குடியில் இருக்கும் வீடுகள் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்துகிடக்கின்றன. பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. இருந்தாலும் ஊருக்குள் நுழையும்போதெல்லாம், துள்ளித் திரிந்த பால்ய நாட்கள் மனதில் அழகான நினைவுகளைக் கிளறிக்கொண்டே இருக்கின்றன!''


- ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்

No comments:

Post a Comment